திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் கோவிலில் மாசி மாதம் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம், இன்று காலை நடந்தது. 46 அடி உயர திருத்தேரில், உற்சவர் சந்திரசேகரர் நீலப்பட்டு உடுத்தி கையில் வில் அம்பு ஏந்தியும், திரிபுர சுந்தரி தாயார் பச்சை பட்டு உடுத்தியும், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, ‘ஒற்றீசா தியாகேசா’ முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்தனர். தேரை வரவேற்கும் விதமாக, சிவனடியார்கள் திருவாசகம் பாடியும், சிறுமியர் கோலாட்டம் ஆடியும், தெய்வ வேடங்கள் அணிந்தும் அணிவகுத்தனர். திருத்தேரானது, சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாடவீதிகளில் வழியாக, மீண்டும் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சன்னதி தெரு வந்து, மாலையில் நிலையை அடைந்தது. திருத்தேரில் இருந்து சந்திரசேகரர் ஆலயத்திற்கு எழுந்தருளல் வைபவம் நடந்தது. மற்றொரு முக்கிய நிகழ்வான, கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், 12ம் காலை 10:10 – 11:54 மணிக்குள்ளாக நடக்கிறது. மாலை, 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு மகிழடி சேவை நடக்கும். 13ம் தேதி, தீர்த்தவாரி கொடியிறக்கம்; 14ம் தேதி, பின் இரவில், தியாகராஜர் 18 திருநடனம், பந்தம் பறி உற்சவத்துடன் திருவிழா நிறைவுறும்.