எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் நாளை தேரோட்டம்
ADDED :233 days ago
பரமக்குடி; எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது.நாளை(ஜூன் 8) தேரோட்டம் நடக்கிறது.
எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் கோயில் 223வது பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. மே 31 காலை கொடியேற்றப்பட்டு தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வருகிறார். நேற்று காலை 9:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல், திருமண சடங்குகள் நிறைவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு பூ பல்லக்கில் பட்டணப்பிரவேசம் நடந்தது. நாளை மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.