திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் தங்க காக வாகனத்தில் சுவாமி வீதியுலா
காரைக்கால்; திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவிழாவை முன்னிட்டு சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தினம் விநாயகர், சுப்ரமணியர்,அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உற்சவம் வீதியுலா, செண்பகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல் நடந்தது.கடந்த 4ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி தேர்திருவிழா கடந்த 6ம் தேதி நடந்தது. நேற்று ஸ்ரீசனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் சகேர்புர வீதியுலா நடைபெற்றது. இன்று தெப்பேற்சவம் நடைபெற்றது. ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா தங்க ரிஷப வாகனத்தில் விசாக தீர்த்தம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.