கோவில்களில் வாத்தியங்கள் இசைக்க தடை ஹிந்து முன்னணி கோரிக்கை
திருப்பூர்; ‘கோவில்களில் வாத்தியங்கள் இசைக்க அனுமதியில்லை என்ற அறிவிப்பை கைவிட வேண்டும்’ என, ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கோவை, வட மதுரையில் பழமை வாய்ந்த விருந்தீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனரில், கோவில் உட்பிரகார மண்டபத்தில் கொம்பு முரசு, உறுமி, சங்கு, பறை, ஜமாப், சிவ வாத்தியம் போன்றவை இசைக்க அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் பக்தி என்பது இசையோடு பின்னி பிணைந்தது. இசையால் இறைவனை எழுந்தருள செய்வது, உறங்க செய்வது போன்ற மரபுகள் இன்றளவும் தொடர்கிறது. இவற்றை போற்றி வளர்க்க வேண்டிய அறநிலையத்துறை, அழித்து வருவது வேதனைக்குரியது. ஹிந்து கோவில்களின் பாரம்பரியங்களை ஒவ்வொன்றாக அழிக்க நினைக்கும் தமிழக அரசு தன் நிலைபாட்டை மாற்றி கொள்ள வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும், ஏற்கனவே உள்ள நடைமுறை பழக்கங்களை மாற்றக்கூடாது; இசைவாத்தியங்கள் முழங்க தடை செய்யக்கூடாது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வெளியில் தாராளமாக வாசிக்கலாம் விருந்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ஷாலினி கூறுகையில், ‘‘இந்த அறிவிப்பு, 2024 அக்., மாதம் வைக்கப்பட்டது. ஆகம விதிப்படி கோவிலில், இதுபோன்று இசைவாத்தியங்களை வாசிக்கக்கூடாது. சுற்றுபிரகாரத்தில் வாசிக்கும் போது, பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இதற்கு முன் இருந்த செயல் அலுவலரிடம் பக்தர்கள் அளித்த புகாரில், இந்த அறிவிப்பு வைக்கப்பட்டது. தேவையில்லாமல், சிலர் இதை தற்போது கிளப்பி விடுகின்றனர். பழமையான கோவில் உள்ளிட்ட காரணங்களால் உட்புறம் அனுமதியில்லை. வெளியில் தாராளமாக வாசிக்கலாம்,’’ என்றார்.