திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை; திருமலை சென்றது
ஸ்ரீவில்லிபுத்துார்; திருப்பதியில் நடக்கும் புரட்டாசி பிரமோத்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் இன்று கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று மதியம் 1:30 மணிக்கு வெள்ளி குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு மாலை, கிளி, பரிவட்டம் சாற்றப்பட்டு, ராஜா பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஆண்டாளுக்கு சாற்றப்பட்ட மாலை, கிளி, பரிவட்டங்களை ஒரு கூடையில் வைத்து ஸ்தானிகம் ஹயக்ரீவாஸ், கோயில் பட்டர்கள் மாடவீதிகள் சுற்றி கொண்டு வந்தனர். பின்னர் கார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பன், செயல் அலுவலர் சக்கரை அம்மாள், ராம்கோ இயக்குனர் ஸ்ரீகண்டன் ராஜா, கோயில் பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர். இந்த மாலையை இன்று திருப்பதி கோவில் நிர்வாகம் பெற்றுக் கொள்கிறது. நாளை கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றப்படுகிறது.