புரட்டாசி கடைசி சனி; காஞ்சி வரதராஜ பெருமாளை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம். அலைமோதுகிறது. 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் 4 வது (கடைசி) சனிக்கிழமையை ஒட்டி வரதராஜ பெருமாளை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை ஒட்டி அத்திகிரி மலையில் உள்ள மூலவர், உற்சவர், வரதராஜ பெருமாளுக்கு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்து தூப தீப ஆராதனைகள் செய்து நெய் தீப விளக்கு வெளிச்சத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை ஒட்டி சுவாமி தரிசனம் செய்வதற்குகாலை வேளையிலேயே உள்ளூர் வெளியூர் வெளிமாநிலம் என பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையும் சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி, அத்தி வரதர் தூயில் கொள்ளும் அனந்த சரஸ் திருக்குளத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.