சபரிமலை சீசன் : குமரி பகவதி அம்மன் கோயில் நடைதிறப்பு நேரம் அதிகரிப்பு
நாகர்கோவில்; சபரிமலை சீசன் தொடங்கும் நிலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வரும் 17- ம் தேதி முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் திறக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை வருகின்ற பக்தர்களில் ஆந்திரா கர்நாடகா தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரிக்கும் வருகின்றனர். சபரிமலை தரிசனத்திற்கு முன்பு அல்லது தரிசனம் முடிந்து திரும்பும் போது கன்னியாகுமரி வந்து செல்வதால் நவம்பர் 15 முதல் ஜனவரி 20 வரை கூட்டம் களை கட்டும். இந்த ஆண்டும் கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தேவையான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கிடையில் சபரிமலை சீசனில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நடையை கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதன்படி காலை அதிகாலை 4:30 மணிக்கு திறக்கப்படும் நடை பகல் 12:30 மணிக்கு பதிலாக 1.00 மணிக்குஅடைக்கப்படும். மாலை 4.00 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 8:30 மணிக்கு பதிலாக இரவு 9.00 மணிக்கு அடைக்கப்படும். வரும்17-ஆம் தேதி முதல் 65 நாட்கள் இந்த உத்தரவு அமலில் இருக்கும்.