உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி; காவிரி துலாக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடல்

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி; காவிரி துலாக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடல்

மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.

சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் பிரம்மவனம்(மயிலாடுதுறை). அங்கு  சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரீரி கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மனமகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உரு நீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரி மாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினாள் இதனால் துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புன்னிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் வந்தபுனிதநீராடி தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக ஐதீகம்.  

இதனை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி 1ம் தேதி தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கி அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி 30ம் தேதி துலா உற்சவம் (கடைமுக தீர்த்தவாரி) சிறப்பாக நடப்பது வழக்கம். இவ்வாண்டு துலா மாத பிறப்பு தீர்த்தவாரி விழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. 21ம்தேதி அமாவாசை தீர்த்தவாரி விழா நடந்தது. தொடர்ந்து நேற்று கடைமுக தீர்த்தவாரி விழா நடந்தது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அயபாம்பிகை சமேத மாயூநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர்ர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான படித்துறை விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், தெப்பக்குள காசி விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரியின் தென்கரையிலும், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், காசிவிஸ்வநாதர் சுவாமி  பஞ்சமூர்ததிகளுடன் காவிரி வடக்கு கரையிலும் எழுந்தருளினர்.  

திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையிலும், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சுவாமி தீர்த்தம் கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி வழிபட்டனர். கடை முக தீர்த்தவாரியை முன்னிட்டு மாவட்ட எஸ்பி.ஸ்டாலின் தலைமையில் 280 போலீசார் ஊர்க்காவல் படையினர் என்சிசி என்எஸ்எஸ் மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !