மண்ணை மலையாக்கும் விநோத கார்த்திகை திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
மேலூர்; நரசிங்கம்பட்டியில் திருகார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கும் விநோத திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நரசிங்கம்பட்டி பெருமாள் மலை அடிவாரக் கோயிலில் நடந்த மண்பிடி திருவிழாவில் நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி தெற்கு தெரு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கோயில் முன் உள்ள ஓடையில் புனித நீராடினர்.பிறகு அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன் போட்டு வழிபாடு செய்தனர். இவ்வாறு ஆண்டுதோறும் பக்தர்கள் போட்ட மணல் இன்று மலை போல் குவிந்துள்ளது. இப் மண் மலையை மூன்று முறை சுற்றி வந்த பக்தர்கள் உப்பு, மிளகு போன்றவற்றை நேர்த்திகடனாக செலுத்தி வழிபட்டனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தங்களது குழந்தையை கரும்புத் தொட்டிலில் கட்டி வந்து முடி காணிக்கை செலுத்தினர். இதேபோல் மேலவளவு கருப்பு கோயிலுக்கு வந்த பக்தர்கள் மலை மீது ஏறி கற்களை வீசியும், விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் அருவாளை காணிக்கையாக செலுத்தினர். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.