கொண்டத்து காளியம்மன் கோவில் புணரமைப்பு : நிதி உதவியில் உபயதாரர்கள் தாராளம்
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லுரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது.
கோவிலை புணரமைப்பு செய்து, புதுபிக்க பக்தர்கள், பொது மக்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதனையொட்டி, 3.60 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம், 6.34 கோடி ரூபாய் மதிப்பில் திருமாளிகை பக்தி மண்டபம், 2.42 கோடி ரூபாய் மதிப்பில் வசந்த மண்டபம், மற்றும் சுற்று சுவர், முத்து குமாரசாமி, விநாயகர் கோவில் உள்ளிட்டவை உபய தாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்பின் மூலம் புனரமைத்து கொள்ள இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதனையொட்டி, முதல் கட்டமான 66 அடி உயரத்தில், 43 க்கு 23 அடி அகலத்தில் ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து, அடுத்தடுத்த புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும், பணிகள் பற்றிய ஆலோசனை மற்றும் திருப்பணியை நிறைவு செய்யும் பொருட்டு கோவில் மிராசுதாரர்ன்கள், மண்டப கட்டளை தாரர்கள், உபயதாரர்கள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு, கோவில் அறங்காவலர் குழு தலைவர் மனோகரன், தலைமை வகித்தார். அறங்காவலர்கள், சுந்த முத்து, திருமூர்த்தி, ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சங்கர சுந்தரேசுவரன் வரவேற்றார். கூட்டத்தில், ராஜ கோபுரம் நான்கு நிலைகள், குறிஞ்சி மண்டபம், கொடிமரம், முத்துகுமாரசாமி, விநாயர் கோவில், சுற்று சுவர் என ஒவ்வொறு பணிக்கும் ஒவ்வொரு உபயதாரர்கள் மற்றும் கூட்டாகவும் நிதி வழங்க பொறுப்பேற்று கொண்டனர். தொடர்ந்து, அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்ள நிதி வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக 30 பேர் கொண்ட திருப்பணி வசூல் கமிட்டி அமைப்பது. பணியை விரைவாக மேற்கொள்ள 30 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.