சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து இன்று காலை 8 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் கே.சிவாநாத் தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்தி வீதிஉலா உற்சவம் நடைபெறுகிறது.
வரும் ஜன.2-ம் தேதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜன.3ம் தேதி சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜன.4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜன.5-ம் தேதி திங்கள்கிழமை ஞானப்பிரகாசர் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் த.சிவசுந்தர தீட்சிதர், துணைச் செயலாளர் சிஎஸ்எஸ்.வெங்கடேச தீட்சிதர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.