மேஷம்: ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026
அசுவினி: வெற்றி மீது வெற்றி
தைரிய காரகன் செவ்வாய், ஞான மோட்சக்காரகன் கேதுவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2026 முன்னேற்றமான வருடமாக இருக்கும். திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் வெற்றி மீது வெற்றி உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அந்தஸ்து உயரும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.
சனி சஞ்சாரம்
உங்களுக்கு லாபாதிபதியான சனி மார்ச் 6 வரை லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அதன் பின் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அடிக்கடி செலவு ஏற்படும்.
ராகு, கேது சஞ்சாரம்
நவ.13 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் சஞ்சரிப்பதால், ராகுவால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். தொழிலில் லாபம் கிடைக்கும் என்றாலும், பஞ்சம கேதுவால் உறவுகளுடன் இணக்கமற்ற நிலை இருக்கும். பூர்வீக சொத்து பிரச்னை ஏற்படும். பிள்ளைகளால் சிலருக்கு சங்கடம் உண்டாகும்.
குரு சஞ்சாரம்
மார்ச் 17 முதல் மிதுனத்தில் வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கும் குரு, திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு என எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு அதிர்ஷ்ட வாய்ப்புகளை தருவார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வேலை தேடுபவர்களுக்கு நிரந்தர வேலைக்கு வழிவகுப்பார். விரயச் சனியால் உண்டாகும் பாதிப்பு உங்களை நெருங்காத வகையில் நன்மை செய்வார். நினைத்ததை அடையச் செய்வார்.
சூரிய சஞ்சாரம்
ஜன.15 – மார்ச் 14 வரையிலான காலத்திலும், ஜூன்15 – ஜூலை16, செப்.18 – அக்.17 காலங்களில் சூரியன் உங்கள் முயற்சியை வெற்றியாக்குவார். எடுத்த பணிகளில் லாபம் காண வைப்பார். சங்கடங்களில் இருந்து விடுவிப்பார். தன்னம்பிக்கையோடு செயல்பட வைப்பார்.
பொதுப்பலன்
லாப ராகுவும், உச்ச குருவும் 2026 ம் ஆண்டில் உங்கள் நிலையை உயர்த்துவர். பணம், அந்தஸ்து, வீடு, வாகனம், கவுரவம், வேலை என விருப்பங்கள் நிறைவேறும். வேலை தேடுவோருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு வரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும்.
தொழில்
ஆண்டின் தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, மார்ச் 6 ல் விரய ஸ்தானத்திற்கு சென்றாலும், நவ.13 வரை யோகக்காரகன் ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நஷ்டம், கஷ்டம் என்றிருந்த நிலை மாறும். ஏற்றுமதி இறக்குமதி, எலக்ட்ரானிக், மெடிக்கல், கெமிக்கல், இயந்திரம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், பங்கு வர்த்தகம், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மருத்துவ துறைகள் லாபம் தரும். விவசாயத்தில் இருந்த நெருக்கடி நீங்கி ஆதாயம் கிடைக்கும்.
பணியாளர்கள்: வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். பணியாளர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு, விரும்பிய இட மாற்றம் கிடைக்கும்.
பெண்கள்: 2026 எதிர்பார்ப்பு நிறைவேறும் ஆண்டாக இருக்கும். படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர், பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் செல்வாக்கு உயரும்.
கல்வி: படிப்பில் கூடுதல் கவனமும், அக்கறையும் தேவைப்படும். உயர் கல்வியில் எதிர்பார்க்கும் கல்வி, கல்லுாரியில் இடம் கிடைக்க ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.
உடல்நிலை: மருத்துவச் செலவால் அவதிப்பட்ட நிலை மாறும், நீண்ட நாளாக இருந்த தொல்லை விலகும். உடல்நிலை சீராகும்.
குடும்பம்: தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவர். வீடு, வாகனம், நவீன பொருட்கள் என்ற கனவு நனவாகும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
பரணி: யோக காலம்
வீரிய காரகன் செவ்வாய், அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும் புத்தாண்டான 2026ல் வசதிகள் அதிகரிக்கும். வாய்ப்பு தேடி வரும். சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். குடும்பம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவுகளின் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சொத்து சேரும்.
சனி சஞ்சாரம்
ஜீவனக்காரகன் சனி ஆண்டின் தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். மார்ச் 6 முதல் விரய ஸ்தானத்தில் ஏழரைச்சனியாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவு ஏற்படும். மனதில் குழப்பம் செயலில் சங்கடம் உண்டாகும்.
ராகு, கேது சஞ்சாரம்
நவ.13 வரை ராகுவால் தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைத்து நஷ்டத்தில் இயங்கிய தொழிலும் லாபமடையும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். கேதுவால் பூர்வீக சொத்துகளில் எதிர்பாராத பிரச்னைகளும், குடும்ப உறவுகளால் மனம் வருந்தும் நிலையும் உண்டாகும்.
குரு சஞ்சாரம்
மார்ச் 17 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு குடும்பத்தில் நிம்மதி, கொடுக்கல் வாங்கலில் சீரான நிலை, பணப்புழக்கத்தை ஏற்படுத்துவார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை உண்டாக்குவார். அதன்பின் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். வீடு, வாகனம், திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகளை நனவாக்குவார். மே.26 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு இருட்டில் இருப்பவர்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். செல்வாக்கை அதிகரிப்பார். அதிர்ஷ்ட மழையில் நனைய வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகளை நீக்கி லாபம் காண வைப்பார். வேலை தேடி வந்தவர்களை அவரவர் திறமைக்குரிய வேலையில் அமர வைப்பார். விரய சனியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மே 26 முதல் உங்களைப் பாதுகாப்பார்.
சூரிய சஞ்சாரம்
ஜன.15 – மார்ச் 14 வரையிலான காலத்திலும், ஜூன் 15 – ஜூலை 16 மற்றும், செப். 18 – அக். 17 காலங்களிலும் சூரியன் உங்கள் ஜீவன, லாப ஸ்தானங்களிலும், சகாய, சத்ரு ஸ்தானங்களிலும் சஞ்சரிப்பதால் அரசு வழி வேலைகளில் வெற்றியுண்டாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். வம்பு, வழக்கு, பிரச்னை என்றிருந்த நிலை மாறும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம், உயர்வு ஏற்படும்.
பொதுப்பலன்
2026 ம் ஆண்டில் உங்கள் நிலை உயரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு அதிகரிக்கும், வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். செல்வாக்கு உண்டாகும். பட்டம், பதவி, அந்தஸ்து கிடைக்கும். வீடு, வாகனம், வேலை என்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். குழந்தைக்காக ஏங்கியோரின் ஏக்கம் தீரும். வேலையில் இருப்பவர்களுக்கு தடைபட்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை சிறக்கும். கலைஞர்கள், அரசியல்வாதிகள் நிலை உயரும்.
தொழில்
தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். கடந்த கால அனுபவத்தைக் கொண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். விற்பனையில் கவனம் செலுத்தி ஆதாயம் காண்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதியும், கேட்ட இடத்தில் இருந்து பண உதவியும் கிடைக்கும். ஆடை, ஆபரணம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், அழகு சாதனம், நிதிநிறுவனம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், பெட்ரோலியம், உணவகம், விவசாயம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றமடையும். சினிமா, தொலைக்காட்சி, யூடியூப் வளர்ச்சி அடையும். எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆலோசகர்கள் முன்னேற்றம் காண்பர்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். சிலர் வேலையை விட்டு விட்டு வேறு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்வர். பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.
பெண்கள்
குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்பிருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் நீடிக்கும். இளம் பெண்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணியாளர்கள் குடும்பத்தை விட்டு விலகியிருந்த நிலை மாறும். எதிர்பார்த்த மாற்றம் கிடைத்து குடும்பத்துடன் வசிக்கும் நிலை உண்டாகும். பொன், பொருள் சேரும். உறவுகள் மத்தியில் கவுரவமாக வாழும் நிலை உண்டாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குழந்தை பாக்யத்திற்காக ஏங்கியவர்கள் ஏக்கம் தீரும். விவாகரத்து பெற்றவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும்.
கல்வி
பொதுத்தேர்வு வரையில் நண்பர்களை விட்டு விலகி இருப்பதும், பொழுது போக்கு விவகாரங்களில் ஈடுபாடு காட்டாமல் இருப்பதும் நன்மை தரும். படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் இது என்பதால் வகுப்பறையில் மட்டும் இல்லாமல் வீட்டிலும் படிப்பின்மீது அக்கறை கொள்வது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவீர்கள்.
உடல்நிலை
ருண ரோக ஸ்தானத்தை சனி பார்ப்பதால் ஆரோக்யம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். பரம்பரை நோய், தொற்று நோய் என சிரமப்பட்டு வந்த நிலை மாறும்.
குடும்பம்
குடும்பத்தில் இருந்த போராட்ட நிலை மாறும். தம்பதி ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருந்து குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். சொந்த வீடு, வாகனம் என சந்தோஷம் காண்பீர்கள். உறவுகளின் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன், பொருள், நவீன பொருட்கள் என வசதியாக வாழும் அளவிற்கு குடும்ப நிலை இருக்கும்.
பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட வாழ்வில் சங்கடம் விலகி நன்மை உண்டாகும்.
கார்த்திகை: நல்லகாலம் வந்தாச்சு
ஆத்ம காரகன் சூரியனின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.
2026ம் ஆண்டில் கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் லாபம் தரும். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.
சனி சஞ்சாரம்
கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை லாப சனியாக சஞ்சரித்து ஆதாயம் அளிப்பவர் அதன்பின் ஏழரை சனியாக விரய செலவுகளையும் அலைச்சலையும் உண்டாக்குவார். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வேலையில் நெருக்கடி, தொழிலில் போராட்டம், பணியில் பிரச்னைகள் என்ற நிலையை வழங்குபவர் அதன்பின் லாப சனியாக வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பணியில் ஏற்பட்ட சங்கடங்களை நீக்கி எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார்.
ராகு, கேது சஞ்சாரம்
1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 வரை ராகு ஆதாயத்தை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். தொழில், வியாபாரம், வேலை, குடும்பம் என அனைத்திலும் சுபிட்சத்தை ஏற்படுத்துவார். சேமிப்பிற்கும், சொத்து சேர்க்கைக்கும் வழியமைப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு நவ.13 வரை பத்தாமிட ராகுவும், சுகஸ்தான கேதுவும் உழைப்பை அதிகரிப்பர். அலைச்சலை ஏற்படுத்துவர். உங்கள் திறமையை சோதிப்பர். தாயாரின் உடல் நிலையில் சங்கடம், தாய்வழி உறவுகளுடன் இடைவெளியை ஏற்படுத்துவர்.
குரு சஞ்சாரம்
மார்ச்16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு மார்ச்17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார். தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சென்று சஞ்சரிக்கிறார். இதனால் 1ம் பாதத்தினருக்கு ஆண்டின் தொடக்கத்தில் பண வரவையும் குடும்பத்தில் நிம்மதியையும் உண்டாக்குவார். திருமண வயதினரை மணமேடை ஏற வைப்பார். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். ஏழரை சனியின் பாதிப்புகளை நெருங்க விடாமல் செய்வார். அக். 20 முதல் அனைத்து நலன்களையும் உண்டாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலை, மன நிலையையும் சீராக்குவார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மார்ச்17 முதல் குடும்பத்தில் நிம்மதி, பொன் பொருள் சேர்க்கையை ஏற்படுத்துவார். மே 26 முதல் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம், வேலை என்ற கனவுகளை நனவாக்குவார். அக்.20 முதல் செல்வம், செல்வாக்கு அந்தஸ்து, வேலையில் முன்னேற்றம், மனதில் நிம்மதியை உண்டாக்குவார்.
சூரிய சஞ்சாரம்
கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு ஜன. 15 – மார்ச்14 வரையிலான காலத்திலும், ஜூன் 15 – ஜூலை 16, செப். 18 – அக்.17 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பிப்.13 – ஏப்.13 காலத்திலும், ஜூலை17 – ஆக. 17, அக்.18 – நவ.16 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார். நெருக்கடி, வம்பு, வழக்கு, பிரச்னையில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். கவுரவம், ஆரோக்யமாகவும் நடைபோட வைப்பார்.
பொதுப்பலன்
உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். போராட்ட நிலை மாறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை, வசதி வாய்ப்பு என கனவுகள் நனவாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்போரின் செல்வாக்கு உயரும்.
தொழில்
தொழிலில் இருந்த தடை விலகும். நஷ்டத்தில் இயங்கி வந்த நிலை மாறும். வருமானம் உயரும். ஆதாயம் அதிகரிக்கும்.அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், மொபைல், சினிமா, சின்னத்திரை, யூ ட்யூப், பங்கு வர்த்தகம், ஆடை ஆபரண விற்பனை முன்னேற்றமடையும். வியாபாரம் விரிவடையும்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஊதியம் உயரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் பிரச்சனை, மெமோ, பதவி உயர்வில் தடை என்றிருந்த நிலை மாறும். வேலையில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இட மாற்றம் கிடைக்கும்.
பெண்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். திறமைக்கு மதிப்புண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவரின் அன்பு கூடும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்கள் குறை ம் தீரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
கல்வி
படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்வர்.
உடல்நிலை
அலைச்சல், வேலைபளுவின் காரணமாக சிறு சங்கடங்களும், பரம்பரை நோய், பருவ நோய் என்று ஏற்பட்டாலும் மருத்துவத்தால் அவை குணமாகும். உடல்நிலை முன்னேற்றமடையும்.
குடும்பம்
குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என்று உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். நீண்டநாள் கனவு நனவாகும்.
பரிகாரம்: சட்ட நாதரை வழிபட நெருக்கடிகள் நீங்கி நன்மை உண்டாகும்.