சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிப்பது வழக்கம். நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கோவிலுக்கு வெளியே உள்ள தரிசன வரிசையில், இரண்டரை மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து, முத்து அங்கி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை தரிசித்து சென்றனர். ஹிந்து சமய அறநிலைய துறையின் திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம் மேற்பார்வையில், செயல் அலுவலர் மாதவன் தலைமையிலான அத்துறையினர் மற்றும் ஆரணி போலீசார் பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்தினர்.