உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஈஷாவில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலம்

கோவை ஈஷாவில் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலம்

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


ஈஷா யோகா மையத்தில், ஆண்டுதோறும் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ஈஷாவை சுற்றியுள்ள மலைவாழ் மக்கள், ஈஷா ஆசிரமவாசிகள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து, மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதில், இயற்கை விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு, பொங்கல் படைத்து வழிபட்டனர்.


ஈஷாவில் சிலம்பம் பயிற்சி பெற்று வரும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், சிலம்பம் சுற்றி அசத்தினர். மேலும், குறைந்து வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 23 வகையிலான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடந்தது. மாலையில், கோவையை சேர்ந்த அலமேலு மங்கம்மாள் கலைக்குழுவினரின், கரகாட்டம், கட்டைக்கால் ஆட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு, 7:20 மணிக்கு, ஆதியோகி திவ்ய தரிசனத்துடன் பொங்கல் விழா நிறைவடைந்தது. பொங்கல் விடுமுறை நாட்களான கடந்த இரண்டு நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள், ஈஷாவிற்கு வருகை தந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !