பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் மாட்டு பொங்கல் சிறப்பு வழிபாடு
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
பாகூரில் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின், மூலவர் கோபுரத்தில் இந்திர நந்தி, பிரம்ம நந்தி, விஷ்ணு நந்தி, தரும நந்தி, அர்த்த மண்டபத்தில் ஆத்ம நந்தி, ரிஷப நந்தி, மூலவர் எதிரே அதிகார நந்தி மற்றும் கொடிமரம் அருகே வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள்பாலிக்கும் செல்வ நந்தி என, மொத்தம் எட்டு நந்தி பெருமான்கள் அருள்பாலித்து வருவது இக்கோவிலின் சிறப்பாகும். மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி, எட்டு நந்தி பெருமான்களுக்கும் நேற்று சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, காய்கறிகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், லட்சுமி நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.