ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கழிவு துணி குவியல் : பக்தர்கள் அருவெருப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் கழிவு துணிகள் குவிந்து கிடப்பதால் பக்தர்கள் அருவெருப்புடன் நீராடி செல்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் அக்னி தீர்த்த கடலில் சுகாதாரம் பராமரிக்க ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை. தினமும் அக்னி தீர்த்தத்தில் நீராடும் பக்தர்கள் ஈரக் கழிவு துணிகளை கடலோரத்தில் வீசுகின்றனர். இதனை நகராட்சி ஊழியர்கள் சேகரித்து டிராக்டரில் எடுத்து சென்று சுகாதாரம் பராமரித்தனர். ஆனால் சில நாட்களாக அக்னி தீர்த்த கரையில் துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்து அலங்கோலமாய் காட்சியளிக்கிறது. இதனை ஊழியர்கள் சேகரித்து அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளும் கவனம் செலுத்துவதில்லை. இதனால் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் அருவெருப்புடன் நீராடி செல்கின்றனர். ஹிந்துக்களின் புனித தீர்த்தமான அக்னி தீர்த்த கரையில் சுகாதாரம் பராமரிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.