1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தில் பிரசித்த பெற்ற லோகாம்பிகை தேவி சமேத பாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாக கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிந்து, நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. காலை 7:30 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து, ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கும், சுந்தர விநாயகர், பாலீஸ்வரர், லோகாம்பிகை தேவி, சண்முகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னிதிகளுக்கும் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் புனிநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு அபிஷேக தீபராதனைகள் நடந்தன. நேற்று மாலை திருக்கல்யாணம் மற்றும் தெப்போற்சவம் நடந்தன.
செங்குன்றம் துணை கமிஷனர் பாலாஜி தலைமையில், பொன்னேரி உதவி கமிஷனர் சங்கர், திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் காளிராஜ் ஆகியோர் மேற்பார்வையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.