உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி தைப்பூச திருக்கல்யாண உற்ஸவம் தேரோட்டம்

பழநி தைப்பூச திருக்கல்யாண உற்ஸவம் தேரோட்டம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று வள்ளி தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இன்று (பிப்., 1) தேரோட்டம் நடக்கிறது.


இக்கோயிலில் ஜன., 26ல் தைப்பூச திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கடா, காமதேனு, யானை வாகனங்களில் இரவு சுவாமி புறப்பாடு நடந்தது.


திருக்கல்யாணம் உற்ஸவம் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி தெய்வானை முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. இதற்காக யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யதாரணம் செய்யும் நிகழ்வு நடந்தது. அப்போது திரளாக கலந்து கொண்ட பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண் அதிர எழுந்தன.


திருமணகோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு வெள்ளி தேரோட்டம் ரத வீதிகளில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தீர்த்தம் கொடுத்தல் இன்று (பிப்., 1ல்) அதிகாலை 5:00 மணிக்கு சண்முக நதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நிகழ்வு நடக்க உள்ளது.


தேரோட்டம் அதனைத் தொடர்ந்து காலை 11:15 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நடக்கும். மாலை 4:00 மணிக்கு தைப்பூச தேர் வடம் பிடித்து தேரோட்டம் ரதவீதிகளில் நடக்கிறது.


தடம் பார்த்தல் தேர் நிலைக்கு வந்தவுடன் தந்த பல்லாக்கில் தேர் கால் தடம் பார்க்கும் நிகழ்வு நடக்கும். பின் நாளை (பிப்., 2) இரவு 8:00 மணிக்கு தங்க குதிரை வாகனம் பிப்., 3 இரவு 9:00 மணிக்கு பெரிய தங்கமயில் வாகனத்தில் ரதவீதி உலா விமர்சையாக நடக்கிறது. பிப்., 4 மாலை தெப்பத் தேர் திருவிழா நடைபெற்று, அன்று இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !