மேட்டுப்பாளையத்தில் தைப்பூச தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே பாலசுப்பிரமணியர் கோயிலில், தைப்பூசத் தேரோட்டம் நடந்தது.
சிறுமுகை அருகே பழத்தோட்டத்தில், மிகவும் பழமையான, ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த ஆண்டு தைப்பூச தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 10:30 மணிக்கு கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோயில் வளாகத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக பாலசுப்பிரமணியர் திருமணக் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை, 5:30 மணிக்கு தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிவசங்கரி மற்றும் சிறுமுகை உட்பட ஏழு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், விழா கமிட்டியினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர் ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோன்று மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி தேருக்கு எழுந்தருளினார். தனசேகர் குருக்கள் தலைமையில் கண்ணன் குருக்கள் தேர் முன்பு சிறப்பு பூஜை செய்தார். பின்பு மாலை, 4:25 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, என, கோஷம் போட்டு இழுத்து சென்றனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாகவும், ஊட்டி சாலை, பழைய நகராட்சி அலுவலகம் வழியாக, மீண்டும் கோயிலை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.