வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம்; பக்தர்கள் வழிபாடு
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.
கடலூர் மாவட்டம், வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 155வது ஆண்டு, தைப்பூச ஜோதி தரிசன திருவிழா, கடந்த, 1ம் தேதி, கோலாகலமாக நடந்தது. விழாவின் இறுதி நிகழ்வான நேற்று, வடலூர் அடுத்த மேட்டுக்குப்பத்தில், வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாக திருஅறை தரிசனம் நடந்தது. நிகழ்வை ஒட்டி வடலூர் சத்திய ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பல்லக்கு, வள்ளலார் மேட்டுக்குப்பம் நடந்து சென்ற பாதை வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பல்லக்கை வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலர் தூவி வரவேற்று வழிபட்டனர். கருங்குழி கிராமத்தை சேர்ந்த மீனவ சமூகத்தினர் பல்லக்கை தோளில் சுமந்தபடி, வள்ளலார் வழிபட்ட கருங்குழி வினாயகர் கோவில், தண்ணீரில் விளக்கு எரித்த இல்லம், வள்ளலார் தீர்த்தம் பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில், தீஞ்சுவை நீரோடை அடைந்து மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகை சென்றடைந்தனர். வள்ளலார் சித்தி பெற்ற திருஅறையின் உள்ளே அவர் பயன்படுத்திய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு, திருஅறை தரிசனம், 12:00 மணி அளவில் தொடங்கியது. கடலூர் மாவட்ட பக்தர்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து மாலை, 6:00 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருஅறை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக வடலூரில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.