உதவிய மகானை மறக்காத மக்கள் 85வது ஆண்டாக குருபூஜை வழிபாடு
வடமதுரை; வடமதுரை அருகே காணப்பாடி புதுப்பட்டியில் தங்கி மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்த மதுரை பகுதி மகானுக்கு நன்றி கடனாக திருவிழா போல கிராம மக்கள் 85வது குருபூஜையை நடத்தினர்.
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. தனது 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி வடமாநிலத்திற்கு சென்றார். அங்குள்ள திருத்தலங்களை தரிசித்துவிட்டு சில ஆண்டுகள் வடமதுரையிலும், கா.புதுப்பட்டியிலும் தங்கினார். கள்ளிமரத்தடியில் தங்கிய அவர் மீது மட்டும் மழை நீர் பெய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஏதோ மகத்துவம் இருப்பதாக எண்ணி அவர் மீது பக்தி கொண்ட மக்கள், ‘கள்ளியடி குருநாதர்’ அழைத்தனர். புதுப்பட்டியிலே தங்கி கிராம நலனுக்காக பல நல்ல காரியங்களை செய்த அவர் 1941 ஜன.21ல் மகாசமாதி அடைந்தார். அவரது நினைவாக கோயில் கட்டிய மக்கள், ஆண்டுதோறும் இறந்த நாள் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு குரு பூஜை விழா நடத்துகின்றனர். இன்று 85வது ஆண்டாக நடந்த குரு பூஜை விழாவிற்காக 4,160 கிலோ அரிசி கொண்டு ‛மெகா’ புளியோதரை பிரசாதம் தயாரிக்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பல ஆயிரம் பக்தர்கள் கோயிலில் வழிபட்ட பின்னர் ஊர் மந்தையில் அமர்ந்தனர். விழா கமிட்டியினர் மூலம் அனைவருக்கும் புளியோதரை பிரசாதம் சேர்ந்ததும் ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் கலைந்து சென்றனர்.