தியாக பிரம்ம கான சபா சார்பில் தியாகராஜர் சுவாமி ஆராதனை விழா
சென்னை: தியாக பிரம்ம கான சபா சார்பில், 15வது, ‘சுவாமி தியாகராஜர் ஆராதனை – 2026’ துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா, தி.நகர் வாணி மஹாலில் நேற்று துவங்கியது.
இதில், தியாக பிரம்ம கான சபா சார்பில், மூத்த ‘கடம்’ வித்வான் ‘விக்கு’ டி.எச்.விநாயக்ராமுக்கு, ‘தியாக பிரம்ம நாத விபூஷன்’ விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக, ‘மிஷன் கர்மயோகி பாரத்’ நிறுவனர் ராமதுரை பங்கேற்று விருது வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘என் வீட்டில் எப்போதும் இசை ஒலிக்கும். இசை, ஒழுக்கம் மற்றும் உத்வேகத்தின் உந்துதலாகவும் இருந்து வருகிறது. என் மனைவி மாலா, கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி என இரண்டு இசைகளிலும் பயிற்சி பெற்றவர். ‘‘பல ஆண்டுகளாக, அவரது பயிற்சி, கற்பித்தல் மற்றும் நிகழ்ச்சிகளை பார்ப்பது, எந்த மேலாண்மை குறித்த புத்தகமும் கற்பிக்க முடியாத, பொறுமை மற்றும் பணிவு போன்றவை எனக்குள் கட்டமைக்கிறது,’’ என்றார். ‘வயலின்’ கலைஞர் ஸ்ரீராம்குமார் பேசுகையில், ‘‘ஒரு இசை நிகழ்ச்சிக்கு, அனைத்து இசை வாத்தியங்களும் இன்றியமையாதவை. ‘‘ எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பல இசை கச்சேரிகளில், விநாயக்ராமும், நானும் வாசித்துள்ளோம். ‘கீர்த்தனை, பஜன், அபங்’ என அனைத்துக்கும், விநாயக்ராம் ‘கடம்’ வாசிப்பார். அவர் போல் ஒரு கலைஞர் இருப்பது அரிது,’’ என்றார். சுவாமி தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி, வரும் 15ம் தேதி சங்கீத நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து, 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை, மாலை 6:30 மணிக்கு, ‘சுவாமி தியாகராஜரின்’ சங்கீத உபன்யாசத்தை, கிருத்திகா பரத்வாஜ் வழங்குகிறார்.