உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.6 கோடி வருமானம் இருந்தும் தரம் உயர்த்தப்படாத திருப்போரூர் கந்தசுவாமி கோவில்

ரூ.6 கோடி வருமானம் இருந்தும் தரம் உயர்த்தப்படாத திருப்போரூர் கந்தசுவாமி கோவில்

திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை, உதவி ஆணையர் தரத்திற்கு உயர்த்தும் நடவடிக்கை நீண்ட காலமாக கிடப்பில் உள்ளதால், விரைவில் தரம் உயர்த்த வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில், புகழ் பெற்றது. இக்கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை விழா, சித்திரை வசந்த விழா, ஐப்பசி கந்த சஷ்டி விழா, மாசி பிரம்மோத்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதிகரிப்பு இக்கோவிலுக்கு சொந்தமாக சென்னை, மதுரை, புதுச்சேரி, திருப்போரூர், கருநிலம், பொன்மார், ஆலத்துார், மறைமலை நகர் உட்பட பல்வேறு இடங்களில், 600 ஏக்கர் நிலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் கடைகள் உள்ளன. பக்தர்களின் வருகை அதிகரிப்பு, பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து அதிகரிப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு, இவற்றுடன் உண்டியல் வருமானம், வாகன நுழைவு கட்டணம், நிலக்குத்தகை மற்றும் கட்டட வாடகை, பிரசாத கடை ஆண்டு ஏலம், காணிக்கை முடி ஏலம் ஆகியவற்றால் வருமானம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, 50 லட்சம் ரூபாய் வருவாய் பிரிவில் இருந்த இந்த கோவில், தற்போது 6 கோடி ரூபாய் வருவாய் கோவிலாக மாறியுள்ளது.


இதற்கிடையே, பக்தர்களுக்காக கோவில் அருகே 3 கோடி ரூபாயில், கோவில் சார்ந்த திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, பக்தர்கள் ஓய்வுக்கூடம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளன. மண்டபம் மேலும், 6.65 கோடி ரூபாய் மதிப்பில், 500 பேர் அமரும் வகையில் பல்வேறு வசதிகளுடன் திருமண மண்டபமும் கட்டப்பட்டு வருகிறது. இப்படி, வருவாய் பெருகி வரும் இந்த கோவில், செயல் அலுவலர் நிலையிலேயே உள்ளது. கோவிலை தரம் உயர்த்துவதற்கான கோப்புகளை, கோவில் நிர்வாகம் அனுப்பியுள்ளது. அதேபோல், தமிழக சட்ட சபையில், அறநிலையத் துறை சார்ந்த அறிவிப்புகளின் போது, இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்ப்பு வரும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளாதது, ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் உள்ள கோவில்களை உதவி ஆணையர் பராமரிப்பின் கீழ் கொண்டு வந்து நிர்வகிக்க வேண்டும். கூடுதல் நிதி அந்த வகையில் பார்த்தால், ஆண்டிற்கு 6 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வரும் திருப்போரூர் கந்தசுவாமி கோவில், தற்போது வரை செயல் அலுவலர் நிலையிலேயே தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. கோவில் நிர்வாகத்தை தரம் உயர்த்தினால், பல்வேறு முக்கிய முடிவுகளை உதவி ஆணையரே எடுத்து செயல்படுத்த முடியும், பணிபுரியும் பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம், கோவிலில் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் நிதி கிடைக்கும். பக்தர்களுக்கான வசதிகளும் மேம்படும். எனவே, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலை செயல் அலுவலர் அளவில் இருந்து, உதவி ஆணையர் தரத்திற்கு உயர்த்த, ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !