காஞ்சி சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று, சனி மஹா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள மணிகண்டீஸ்வரர் கோவிலில், தேய்பிறை சனி மஹா பிரதோஷத்தையொட்டி மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், இளநீர், சந்தனம், தேன், விபூதி, ஜவ்வாது, கரும்பு சாறு உள்ளிட்ட பல்வேறு நறுமணம் கமழும் திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெரு ருத்ரகோடீஸ்வரர் கோவிலில், மூலவருக்கும், நந்தி பகவானுக்கும், சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மஹா தீப ஆராதனை நடந்தது.
காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் கிழக்கு கரை, வீரஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அனுமந்தீஸ்வரர், யோக லிங்ஸ்கேஸ்வரருக்கு பால், விபூதி, சந்தனம், தேன், இளநீர், பன்னீர், ஜவ்வாது, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் பிரதோஷ சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
கிளார் அகத்தீஸ்வரர், எடமச்சி முத்தீஸ்வரர், மேலச்சேரி வேதபுரீஸ்வரர், திருக்காலிமேடு சத்யநாதசுவாமி, காந்தி சாலை வன்னீஸ்வரர், திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர், கருவேப்பம்பூண்டி காசிவிஸ்வநாதர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் நேற்று சனி மஹா பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.