அங்காள பரமேஸ்வரி கோயிலில் 300 பேர் குண்டம் இறங்கி வழிபாடு
அன்னூர்; அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழாவில், 300க்கும் மேற்பட்டோர் அக்னி குண்டம் இறங்கினர்.
அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் மகா சிவராத்திரி குண்டம் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 13ம் தேதி காலை அபிஷேக பூஜையும், இரவு மயான பூஜையும் நடந்தது. கடந்த 14ம் தேதி ஜமாப் இசையுடன் நந்தி அழைத்தல், அணிக் கூடை எடுத்து வருதல் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் அலகு தரிசனமும், அங்காள பரமேஸ்வரி திருக்கல்யாண உற்சவமும், இரவு மூக்கனூர் சித்தி விநாயகர் கலைக்குழுவின் கும்மியாட்டமும் நடந்தது. இன்று காலை 6:30 மணிக்கு அக்னி குண்டம் இறங்கும் நிகழ்வு துவங்கியது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபட்டனர். மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை காலை 8:00 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. வருகிற 18ம் தேதி மதியம் பேச்சியம்மன் பூஜை நடைபெறுகிறது.