அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை உத்சவம் விமரிசை
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.
உத்வசத்தையொட்டி, கடந்த 13ம் தேதி, காலை 6:00 மணிக்கு பந்தக்கால் விழாவும் நடந்தது. மஹாசிவராத்திரியான நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து சிவலிங்க பூஜையுடன் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று, மாலை 3:30 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கிழக்கு ராஜ வீதி, புத்தேரி தெரு வழியாக சென்று, சர்வதீர்த்தம் அடுத்த மயானத்தில், மயானகொள்ளை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பல்வேறு வடிவ காளி வேடம் அணிந்தும், உடலில் எலுமிச்சை பழம் குத்தியும், வாயில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டன. நேர்த்திக்கடனாக காய்கறிகள், பழவகைகள், கொழுக்கட்டை, சில்லறை நாணயம் உள்ளிட்டவற்றை சூறைவிட்டனர். விழாவில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உத்சவத்தை தொடர்ந்து, கும்பம் படையலிடப்படுகிறது. நாளை, காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.