மகாலட்சுமி கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றல்
இடையகோட்டை; இடையகோட்டை அருகே வலையபட்டி ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இடையகோட்டை வலையபட்டியில், ராயர் குலவம்சம் குரும்பாகவுண்டர் இனமக்களின் குலதெய்வமான மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழா நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழாவில் முதல் நாளன்று குலவிளக்கு ஏற்றி விழா தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று பரம்பரை யாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேண்டிய வரம் கேட்பவர்களுக்கும் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடந்தது. நேற்று 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது. பரம்பரையாளர்கள், குலமக்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.