மகன்களை கொல்ல முயன்ற பாவம் போக்க
மகன்களான லவ – குசாவை கொல்ல, வில்லை ஏந்தியதால், தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க, சிவனை பிரதிஷ்டை செய்து ராமர் வழிபட்ட இடம் பற்றி பார்ப்போம்.
கோலார் மாவட்டம், முல்பாகில் தாலுகாவின் அவனி கிராமத்தில் உள்ளது அவனி மலை. இந்த மலையில் சீதாதேவியின் சன்னிதி உள்ளது. 640 படிக்கட்டுகள் ஏறிச்சென்று சீதா தேவியை தரிசிக்கலாம்.
இந்த மலையின் அடிவாரத்தில் ராமலிங்கேஸ்வரா கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் வளாகத்திற்குள், நந்திகேஸ்வரா, ராமலிங்கேஸ்வரா, லட்சுமண லிங்கேஸ்வரா, பரத லிங்கேஸ்வரா, சத்ருஹன் லிங்கேஸ்வரா என, தனித்தனி சன்னதிகள் உள்ளன. இதனை ராமலிங்கேஸ்வரா குழு கோவில் என்றும் அழைக்கின்றனர்.
புராணங்கள்படி, மகரிஷி வால்மிகி ஆசிரமம் இருந்த பகுதி தான் அவனி. இங்கு தான் சீதாதேவி, தன் வனவாசத்தின் போது வசித்து, லவா – குசாவை பெற்றெடுத்தார்.
ஸ்ரீராமர் அஸ்வமேத யாகத்தின் போது, புனித குதிரை, இந்த பகுதிக்குள் நுழைந்தது. இதனை லவனும், குசனும் சிறை பிடித்தனர். இதையறிந்த ராமர், நேரடியாக குதிரையை மீட்க வந்தார். அப்போது, லவ – குசா இருவரும் தன் பிள்ளைகள் என்று அறியாமல், ராமன் தன் வில்லை எய்ய முயற்சித்தார்.
அப்போது அங்கு வந்த வால்மீகி மகரிஷி, லவ – குசா இருவரும், ராமரின் பிள்ளைகள் என்று கூறினார். இதையறிந்த ராமர் தன் பிள்ளைகளை கொல்ல முயற்சித்தேனே என்று வேதனை அடைந்தார். அதற்கு பரிகாரமாக, ஆசிரமத்தில் இருந்த சிவனை நிறுவி வழிபட்டார்.
ராமரின் தவத்துக்கு தெய்வீக சாட்சியாக, நந்தி பகவான், முதலில் ராமரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு தான், சிவன் மன்னிப்பு வழங்கினார் என்று கூறப்படுகிறது. அதனாலேயே, இக்கோவிலை நந்திகேஸ்வரா என்று அழைக்கின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலை, 1,000 ஆண்டுகளுக்கு முன் நோளம்பா வம்சத்தினர் கட்டினர். அதன்பின், சோழம், விஜயநகர மன்னர்களால் பராமரிக்கப்பட்டது. இந்த கோவில், ஆரம்பகால திராவிட சைவ கட்டட கலையை பிரதிபலிக்கிறது. கிரானைட் கல்லை பயன்படுத்தி கட்டப்பட்டு உள்ளது.
நந்தி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அமைதியாக அமர்ந்த நிலையில் சிவன் சன்னதியை நோக்கி கட்டப்பட்டு உள்ளது.
நந்தி வலிமை, பொறுமை, ஒழுக்கம், பக்தி, கருவுறுதல், தர்மத்தை குறிக்கிறது. நந்தியின் காதில் நம் வேண்டுதலை கூறினால், சிவனுக்கு நேரடியாக சென்றடையும் என்று நம்பப்படுகிறது.
நந்திகேஸ்வரர், கால்நடைகளின் தெய்வீக வடிவமாக வணங்கப்படுவதால், இங்கு மாட்டுப்பொங்கல் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், இனிப்பு பொங்கல், கரும்பு, வாழைப்பங்கள், தானியங்கள் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும்.
தங்கள் கால்நடைகள் நன்றாக இருக்கும், நல்ல விளைச்சல் கிடைக்கவும், விவசாயிகள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
மாட்டு பொங்கலன்று இங்கு நந்தியை வழிபடுவது சிவனின் முழு ஆசிர்வாதம் கிடைக்கும்; விவசாயத்தை பாதுகாக்கும், தடைகள் நீங்கும், ஆன்மிக பலத்தை வழங்குகிறது என்று மக்கள் நம்புகின்றனர்.