பத்தாம் வகுப்பு மற்றும் பொதுத் தேர்வு மாணவர்களுக்காக சிறப்பு ஹோமம்
மேட்டுப்பாளையம்: பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாணவர்கள் திறம்பட தேர்வு எழுதி வெற்றி பெற, சிறுமுகை அருகே உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர் யாகம் நடந்தது. சிறுமுகை அடுத்த இலுப்பநத்தத்தில் லட்சுமி நரசிங்க பீடம், நரசிம்ம பெருமாள் ஸ்ரீ வள்ளி தாயார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று மாசி மாத சுவாதி ஹோமம் நடந்தது. காலையில் சுப்ரபாதம், திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, திருப்பல்லாண்டு ஆகியவை நடந்தன. பின்பு விஸ்வக்ஷேனர் பூஜையும், புண்யாவசனம், கலச ஆவாகனம், பஞ்ச சுத்த ஜபம் செய்யப்பட்டது. பின்பு சுதர்சன ஹோமம், நரசிம்மர் ஹோமம், லட்சுமி காயத்ரி ஹோமம், கருட, ஆஞ்சநேய ஹோமம், புத்திர ஹோமம், திருமண தோஷ நிவர்த்தி ஹோமம், நவகிரக தோஷ நிவர்த்தி ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடந்தன. பின்பு பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாணவர்கள் திறம்பட தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற ஹயக்ரீவர் ஹோமம் செய்யப்பட்டது. பூர்ணாஹுதி முடிந்து, மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்து, சாற்றுமுறை சேவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோ பூஜையும், ஏகாந்த சேவையுடன் வைபவம் நிறைவடைந்தது. பூஜையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.