உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசியே அதிர்ந்த ‘நமசிவாய’ கோஷம் இரண்டாம் நாள் தேரோட்டம் கோலாகலம்

அவிநாசியே அதிர்ந்த ‘நமசிவாய’ கோஷம் இரண்டாம் நாள் தேரோட்டம் கோலாகலம்

அவிநாசி: ‘அவிநாசியப்பருக்கு அரோகரா’ என்ற முழக்கம் ரத வீதிகளில் எதிரொலிக்க, ‘தென்னாட்டு காசி’ எனப் போற்றப்படும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் இரண்டாம் நாள் தேரோட்டம் நேற்று பக்தர்கள் புடைசூழ நடந்தது.

நேற்று முன்தினம் வடம் பிடிக்கப்பட்டு மேற்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டிருந்த சோமாஸ்கந்தர் எழுந்தருளிய பெரிய தேரை, நேற்று காலை 10:05 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீண்டும் வடம் பிடித்து இழுத்தனர். சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், பாதங்கள் தகித்த போதும், பக்தர்கள் தங்கள் உள்ளத்தில் கொண்டிருந்த பக்தி நெருப்பு, தேரை முன்னேற்றிச் சென்றது.

‘ஓம் நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைச் சரணாகக் கொண்டு பக்தர்கள் இழுக்க, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு ரத வீதிகள் வழியாக கம்பீரமாக ஆடி அசைந்து பவனி வந்தது. சிவபெருமான் தேரில் பவனி வந்த வேளையில், வீதிகளில் பக்தர்களுக்குத் தொண்டு செய்வதே சிவப்பணியாகக் கருதி, கோவில் நிர்வாகம், மண்டபத்தார் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகள் சார்பில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாகம் தணிக்க நீர்மோர், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டு, அவிநாசியே தர்மசாலையாகக் காட்சியளித்தது.

மதியம் 2:28 மணிக்கு பெரிய தேர் நிலையை அடைந்தபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரகோஷமிட்டு அவிநாசியப்பரை வழிபட்டனர். கோவை, ஈரோடு, திருப்பூர் எனப் பல மாவட்டங்களில் இருந்தும் திரண்டிருந்த பக்தர்களுக்கு அவிநாசி டி.எஸ்.பி. கனகசபாபதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.  திருவிழா தொடர்ச்சியாக, இன்று காலை 9:00 மணி அளவில் கருணைக்கடல் அன்னை கருணாம்பிகை வீற்றிருக்கும் அம்மன் தேரும், அதனுடன் ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் ஆகிய மூர்த்திகளின் தேர்களும் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளன என்று கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார் கூறினார். அவிநாசியே பக்தி மழையில் நனைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இன்று இந்தத் தேர்கள் ரத வீதிகளில் அணிவகுக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமையப்போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !