பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் ஹிந்து அல்லாதோருக்கு தடை
ADDED :4 hours ago
டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் புனித யாத்திரை மேற்கொள்ளும் நிகழ்வு, ‘சார்தாம்’ யாத்திரை எனப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை, அட்சய திரிதியை நாளான ஏப்., 19ல் துவங்குகிறது. அன்றைய தினம், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் திறக்கப்படும். பத்ரிநாத் கோவில் ஏப்., 23லும், கேதார்நாத் கோவில் ஏப்., 22லும் திறக்கப்படும். பத்ரிநாத் – கேதார்நாத் கோவில் நிர்வாக குழுத் தலைவர் ஹேமந்த் திவேதி கூறியதாவது: சார்தாம் யாத்திரையின் போது, பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களில் ஹிந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை விதிக்கப்படும். இந்த கோவில்கள் சுற்றுலா மையங்கள் அல்ல. ஒவ்வொரு மதமும் தன் நம்பிக்கைகளை கடைபிடிக்க அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.