திருப்புவனத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி திருவிழா
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்புவனம் பகுதி மக்களின் காவல் தெய்வமான முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும், திருப்புவனத்தில் வசிப்பவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பங்குனி திருவிழா நடைபெறும் பத்து நாளில் ஏதாவது ஒருநாளில் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்தாண்டு திருவிழா வியாழக்கிழமை இரவு 8:20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விரதமிருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். கொடியேற்றிய பின் நேர்த்தி கடன் பக்தர்கள் வழங்கிய மலர் மாலைகள் கொடி மரத்திற்கு சார்த்தப்பட்டன. இன்று சனிக்கிழமை மதியம் 3:00 மணிக்கு பூ திருவிழா நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மார்ச் 20 தேதி வெள்ளிகிழமை பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்களும் பக்தர்களும் செய்து வருகின்றனர்.