ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின விழா
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.
21வது ஆண்டு பிரதிஷ்டை தின விழாவை முன்னிட்டு ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது. பின்னர் காலை 10:00 மணிக்கு வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்ச மாதா, சங்கரன், சங்கரி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முற்பகல் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜையாக மூலவர் வல்லபை ஐயப்பனுக்கு அடுக்கு அலங்கார சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்டு பிரார்த்தனை நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை குருக்கள் கண்டரு ராஜீவரூ தலைமையில் இங்கு கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.