உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய கதிர் வலம் வரும் திரியகம்பரேஸ்வரர்

சூரிய கதிர் வலம் வரும் திரியகம்பரேஸ்வரர்

கர்நாடகாவில் கட்டட கலைக்கு பிரசித்தி பெற்ற, பல்வேறு புராதன கோவில்கள் உள்ளன. அவை இன்றும் பக்தர்களை தன் வசம் ஈர்க்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், தங்களின் பெருமை, சிறப்பை தக்க வைத்துள்ளன. இவற்றில், திரியகம்பரேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.


இந்தியாவில் சேர, சோழ, பாண்டியர், பல்லவர், சாளுக்கியர், கதம்பர்கள், யது வம்சத்தினர் உட்பட, பல மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களால் கட்டப்பட்ட கோவில்கள், இன்றைக்கும் மன்னராட்சியின் சிறப்புகள், கடவுள் மீது அவர்களுக்கு இருந்த பக்தி, மன்னர்கள் கடைப்பிடித்த சம்பிரதாயத்தின் அடையாளமாக திகழ்கின்றன.


இன்றைய காலகட்டத்தில், ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள், பாலங்களே இடிந்து விழுவதை காண முடிகிறது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட கோவில்கள் இப்போதும் பொலிவு மாறாமல் இருப்பது, ஆச்சர்யத்துக்குரியது. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலத்தில், வியக்க வைக்கும் கலை நுணுக்கங்களுடன் கோவில்கள் கட்டியது, இன்றைய பொறியாளர்களின் திறமைக்கு சவால் விடுகிறது.


சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவில் திரியகம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது, விஜயநகர மன்னர்கள் கட்டிய கோவிலாகும். கோவிலில் மற்றொரு சிறப்பும் உள்ளது. தினமும் காலை, மாலையில் கோவிலின் முன் பகுதியில் உள்ள நந்தியின் மீது விழும் சூரிய கதிர்கள், அங்கிருந்து நேராக கர்ப்பகிரஹத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீதும் விழுகிறது. இது, மிகவும் அதிசயமானது.


அதுமட்டுமின்றி, தினமும் சூர்யோதயம், சூர்ய அஸ்தமனத்தின் போது, சூரிய கதிர்கள் கோவிலை சுற்றிலும் பிரதட்சணம் செய்கிறது. இது, சிவனின் அற்புத சக்தி என, பக்தர்கள் நம்புகின்றனர். இந்த நிகழ்வு விஞ்ஞானிகளுக்கும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.


கோவிலில் காளை மாட்டை, நந்தியின் அம்சமாக பாவித்து தினமும் பூஜிக்கின்றனர். அன்றைய காலத்தில், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா பகுதிகளில் மழை பெய்யாமல், விளைச்சல் இல்லாமல் பிரச்னை ஏற்பட்டால், அந்தந்த சமஸ்தானத்து மன்னர்கள், திரியகம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்து, சிவலிங்கத்தின் மீது விழும் சூர்ய கதிர்களை தரிசித்து, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர். அவர்கள் தங்களின் சமஸ்தானத்துக்கு சென்ற சில நாட்களிலேயே, அவர்களின் வேண்டுதல் நிறைவேறுமாம்.


இன்றைக்கும் சூர்ய கதிர்கள், சிவலிங்கம் மீது விழுவது, கோவிலை பிரதட்சணம் செய்யும் அதிசய நிகழ்வை காண, பக்தர்கள் திரண்டு வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர். இங்கு குடிகொண்டுள்ள திரியகம்பரேஸ்வரரை தரிசித்தால், நினைத்தது நடக்கும். வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !