திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் ராமநவமி உற்ஸவம்
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் ராமநவமி உற்ஸவம் நாளை காலை நடக்கிறது.
மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமபிரான் பிறந்த நாளே ராமநவமி ஆகும். திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தனி சன்னதியாக தெர்ப்பசயன ராமர், பட்டாபிஷேக ராமர் உள்ளனர். ராம நவமி ஆகிய இன்றைய தினம் காலை 7:00 முதல் 10:30 மணி வரை ராமபிரான், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட உற்ஸவ மூர்த்திகளுக்கு வருடத்தில் ஒரு நாள் மட்டுமே விசேஷத் திருமஞ்சனம் நடக்கிறது. பின்னர் ராமபிரானுக்கு பிடித்த சர்க்கரைப் பொங்கல், பானகம், மோர், சுண்டல் உள்ளிட்டவைகள் நெய்வேத்தியமாக வைக்கப்படுகிறது. பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு அன்றைய தினம் இரட்டை கருட சேவை நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.