காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மன் திருக்கல்யாணம் கோலாகலம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய 4 பேராலும் பாடல் பெற்ற திருத்தலம் ஏகாம்பரநாதர் ஆலயம். பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருக்கோவில் ஆகும். இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் திருப்பணி நடைபெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்து முடிந்தது. பிரசித்தி பெற்ற இவ்விழாவில் ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலிக்கும் (ஏலக்காய் மணமுடைய கூந்தலுக்கு சொந்தக்காரி) திருக்கல்யாணம் நடைபெறும். இந்தத் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் பல்வேறு ஜோடிகளும் தங்கள் திருமணத்தை நடத்திக் கொள்வர். இந்த நிகழ்வின்போது திருமணம் செய்து கொண்டால் ஏகாம்பரேஸ்வரர் நீடித்த இனிமையான மணவாழ்க்கைக்கு ஆதரவாய் அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நிகழாண்டுக்கான பங்குனி உத்திரத் திருக்கல்யாண விழா கடந்த மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நடைபெற்றது. திருமணத்தின் போது அதிர்வேட்டுகள், மேளதாளங்கள் முழங்கின. அப்போது மண்டபத்தின் எதிரே பலர் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். பிறகு, சுவாமியும், அம்பாளும் தங்க ரிஷப வாகனத்தில் நான்கு ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.