தெப்பத்தில் எழுந்தருளிய வடபழனி முருகன்: மூன்று நாள் தெப்பத் திருவிழா துவக்கம்
சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று மாலை தெப்பத்தில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பங்குனி உத்திர விழாவையொட்டி, நேற்று முதல், 4ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா துவங்கியது. நேற்று மாலை தெப்பத்தில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயணம், திருமுறை மற்றும் நாதஸ்வர கச்சேரியுடன் நடைபெற்றது. இன்று இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது. அதேபோல் சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.