திருக்கழுக்குன்றம் சொக்கப்பானை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சொக்கப்பானை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கழுக்குன்றத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. வேதமலை அடிவார வீதி, சன்னிதி வீதி ஆகியவற்றின் சந்திப்பு பகுதியில், சொக்கப்பனை விநாயகர் கோவில் உள்ளது. கார்த்திகை தீப உத்சவத்தின்போது, இக்கோவிலின் முன், சொக்கப்பனை ஏற்றப்படுவதால், சொக்கப்பானை விநாயகர் என அழைக்கப்படுகிறார். கோவில் நீண்டகாலமாக பராமரிப்பில்லாமல் இருந்ததால், அதை புனரமைக்குமாறு, பக்தர்கள் வலியுறுத்தினர். அறநிலையத்துறை புனரமைப்பதாக, கடந்த 2023 சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வேதகிரீஸ்வரர் கோவில் நிதி 8.15 லட்சம் ரூபாய் மதிப்பில், 2024ல் புனரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. சன்னிதி, விமான கோபுரம், சுவர் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டன. நேற்று யாகசாலை சடங்குகள், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, விமானங்களில் 10:00 மணிக்கு புனித நீரூற்றி, மஹாகும்பாபிஷேகம் நடந்தது. அறநிலையத்துறை ஆய்வாளர் பாஸ்கரன், கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.