இளையனார்வேலுார் முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் தொடக்கம்
இளையனார்வேலுார்: இளையனார்வேலுார் முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுாரில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 12 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், நேற்று காலை 7:15 மணிக்கு வேதவிற்பன்னர்கள் மூலம் கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டன. தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பிரம்மோத்சவத்தையொட்டி தினமும் காலையிலும் இரவும், முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அதன்படி முதல் நாள் உத்சவமான இன்று இரவு திருக்கேடயத்தில் உலா வந்தார். இரண்டாம் நாளான இன்று காலை சூரிய பிரபையிலும், இரவு பூத வாகனத்திலும் உலா வருகிறார். மூன்றாம் நாள் உத்சவமான நாளை காலை விமானத்திலும், இரவு சந்திர பிரபையிலும் உலா வருகிறார். இதில், 25ம் தேதி மாலை சென்னை பெரியமேடு இளையனார்வேலுார் பாலசுப்பிரமணியசுவாமி பக்தஜன சபையினரால் மூலவருக்கு பால் காவடியும், உற்சவருக்கு மலர் காவடி சாத்துபடியும், நாதஸ்வர கச்சேரியும் நடக்கிறது. ஏழாம் நாள் பிரபல உத்சவமான தேரோட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது. மே 2ம் தேதி இரவு மாவடி சேவையுடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.