பழநி சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம்
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
பழநியில் மேற்கு ரத வீதியில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று (ஏப்.,22ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. மஞ்சள் நிற கொடியில் லட்சுமிநாராயணபெருமாள் துணை என எழுதப்பட்டு, சங்கு, சக்கரம்,திருநாமம்,கருடாழ்வார்,தாம்பூலம்,தீபாராதனை,தட்டு,பஞ்சபாத்திரம், தூபகோல்,மணி,சடாரி உள்ளிட்டவை வரையப்பட்டு இருந்தது. இதனை கொடிக்கம்பத்தின் முன்பு வைத்து கலச பூஜை நடைபெற்றது. கலசநீர் அபிஷேகம் செய்யப்பட்டு காலை 9:40 மணிக்கு கொடி கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது. லட்சுமிநாராயணபெருமாள், வீதிஉலா நடைபெற்றது. விழாவில் உதவி கமிஷனர் செந்தில்குமார், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் இரவு 7:00 மணிக்கு மேல் சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரச்சப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி ஊர்வலம் ரத வீதியில் நடைபெறும். ஏப்.28., இரவு 7:29 மணிக்கு மேல் இரவு 8:29 மணிக்குள் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும். ஒன்பதாம் நாள் திருவிழாவில் ஏப்.30., காலை 8:31 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் நடைபெறும். மே.1., இரவு கொடி இறக்குதலுடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும்.
பெரியநாயகி அம்மன் கோயிலில் ஏப்.30.,ல் முத்துக்குமாரசுவாமி தங்க குதிரை வாகனத்திலும், வள்ளி, தெய்வானை சப்பரத்திலும் எழுந்தருள்வர்.மே.1., சித்ரா பவுர்ணமி அன்று காலை 8:00 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து 108 பால் குடங்கள் திருஆவினன்குடி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருதல் நடைபெறும். அதன் பின் திரு ஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி,வள்ளி தெய்வானை, வெள்ளி ரதத்தில் எழுந்தருவர். ரத வீதிகளில் புறப்பாடு நடைபெறும். நிகழ்ச்சியினை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.