காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், சித்திரை உத்திரப் பெருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான உத்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், காலை 5:30 மணிக்கு கோவில் கொடி மரத்திற்கு பல்வேறு பூஜை செய்யப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய கச்சபேஸ்வரர் பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். விழாவையொட்டி தினமும் காலை 7:30 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் பல்வேறு வாகனத்தில், சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார். அதன்படி இரண்டாம் நாள் உத்சவமான இன்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் சுவாமி உலா வருகிறார்.
ஐந்தாம் நாள் உத்சவமான வரும் 28ம் தேதி இரவு திருக்கல்யாண உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான வரும் 30ம் தேதி காலை தேரோட்டமும், 10நாள் உத்சவமான மே 3ம் தேதி தேதி இரவு வெள்ளி தேரோட்டமும், 12ம் நாள் உத்சவமான மே5ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் உத்வசமும் நடைபெறுகிறது. மே 8ம் தேதி, இரவு ஊஞ்சல் உத்சவத்துடன் சித்திரை உத்திர பெருவிழா நிறைவு பெறுகிறது. உத்சவத்தையொட்டி தினமும் மாலை 6:00 மணிக்கு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் அரங்கில், வாரியார் ஆன்மிக தொண்டு மன்றத்தினரின், திருமுறை, சொற்பொழிவு, இசை, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது.