கிராம மக்கள் சீர்வரிசை அணிவகுக்க ஸ்ரீபத்ரகாளியம்மன் பொங்கல் விழா
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நான்கு கிராம மக்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்தது. கடந்த 21-ம் தேதி பொரி சாட்டுதலுடன் தொடங்கிய இவ்விழாவில், விநாயகர் பொங்கல், கும்பம் அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் வேட்டுவபாளையம், பொங்கேகவுண்டன்புதுார், சின்னப்புத்துார், அக்ரஹாரப்புத்துார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மேளதாளங்களுடன் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். முக்கிய நிகழ்வாக நேற்று காலை, கிராம மக்கள் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாராக இருந்து சீர்வரிசைகளுடன் வந்து நடத்திய திருக்கல்யாண உற்சவம் பக்தர்களைப் பரவசப்படுத்தியது. தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்வும், மாலையில் முளைப்பாரி மற்றும் பூவோடு ஊர்வலமும் சிறப்பாக நடந்தன. இரவு 9:00 மணிக்கு கும்பம் கங்கையில் விடப்பட்டது. விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் பத்ரகாளியம்மன் அன்னதான பேரவை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டங்கள் நிறைவடைகின்றன.