நாகதோஷத்தை நீக்கும் ஸ்ரீநாகேஸ்வர சுவாமி
ஹாசன் மாவட்டம், நவிலே கிராமத்தில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ நாகேஸ்வரா சுவாமி கோவில் அமைந்து உள்ளது.
இக்கோவில் புராண காலத்தில் இருந்தே புகழ் பெற்று விளங்குகிறது. கிருத யுகத்தில், பக்த பிரகலாதன் புனித யாத்திரையாக இங்கு வருகை தந்து, ‘அஜகரர்’ எனும் முனிவரை தரிசித்ததாக கூறப்படுகிறது. திரேத யுகத்தில், ஸ்ரீராமர் இங்கு வருகை தந்துள்ளார் என்பதற்கான சான்றுகளும் இங்கு காணப்படுகின்றன.
விராட நகரம்
துவார யுகத்தில், பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தை கழித்த ‘விராட நகரம்’ இப்பகுதியில் தான் அமைந்திருந்ததாக கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் இவ்வூர் அமைந்து உள்ளது. சந்திரஹாசன் எனும் வைணவ மன்னன், இப்பகுதியை சேர்ந்தவர் என்றும் நம்பப்படுகிறது.
பண்டைய காலத்தில் சுயம்புவாக தோன்றிய மூலவர் திருவுருவத்தை பல ரிஷி முனிவர்கள், வழிபட்டு வந்துள்ளனர். சப்தரிஷிகளுள் ஒருவரான ஜமதக்னி முனிவர், தன் மனைவி ரேணுகா தேவி, மகன் பரசுராமருடன் இங்கு வசித்து வந்தார்.
நாகேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு மிக அருகிலேயே ரேணுகா தேவி சன்னிதி அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலஸ்தானத்தில் சுயம்புவாக தோன்றிய பிரமாண்டமான நாகத்தின் உருவம் காட்சி அளிக்கிறது. அக்காலத்தில், இப்பகுதியில் ஏராளமான மயில்களும் வாழ்ந்து வந்தன. மயில்கள் நாகங்களை துன்புறுத்துவதை கண்ட ஜமதக்னி மகரிஷி, மயில்கள் அப்பகுதிக்குள் நுழையாத வகையில் அருளாணை பிறப்பித்தார் என்றும் கூறப்படுகிறது.
12ம் நுாற்றாண்டு
இத்தகைய சிறப்புமிக்க கோவில் 12ம் நுாற்றாண்டில் ஹொய்சாளா மன்னரான விஷ்ணுவர்த்தனால் கட்டப்பட்டதாக, அங்குள்ள துாண்களில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.
மூலவரின் இடதுபுறத்தில் ஸ்ரீபார்வதி அம்மன் சன்னிதியும், வலபுறத்தில் ஸ்ரீ சோமேஸ்வரர் சன்னிதியும் அமைந்து உள்ளன. கோவிலின் பின்புறத்தில் ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் சன்னிதி உள்ளது. அங்கிருக்கும் தெப்பகுளத்தின் மைய பகுதியில் ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமி சன்னிதி அமைந்து உள்ளது. இவற்றுக்கு அருகில் ஸ்ரீ மல்லேஸ்வரர் கோவில் என, இப்பகுதியில் மட்டும் மொத்தம் ஐந்து சிவலிங்கங்களை காணலாம்.
ஹொய்சாளர் ஆட்சிக்கு பின், இக்கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு, நாகார்ஜுனன் எனும் குறுநில மன்னரிடம், கங்க மன்னர்கள் ஒப்படைத்தனர்.
வெண்ணிற மலர்கள்
கோவிலின் முகப்பில் உள்ள கல்வெட்டில், நாக தேவதைகள், பசுக்கள், ஆமைகள், நாகார்ஜுனனின் உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன. மூலவருக்கு அபிஷேகம் செய்ய, ‘நீராட்டு கிணறு’ எனப்படும் கிணற்றில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது. இத்தீர்த்தத்தை பக்தர்கள் தங்கள் மீது தெளித்து கொண்டால், அவர்களுக்கு எவ்வித துன்பங்களும் நேராது என்று நம்பப்படுகிறது. குறிப்பாக சுவாமியை மனமுருகி வேண்டினால், நாகதோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
இது தவிர, இறை வழிபாட்டுக்கு தும்பை எனும் வெண்ணிற மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அர்ச்சகரிடம் இருந்து பிரசாதமாக பெறும் மலர்களின் எண்ணிக்கை, ஒற்றைப்படையாக இருந்தால், பக்தர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்றும்; இரட்டை படையாக இருந்தால், வேண்டுதல் கைகூடாது என்றும் நம்புகின்றனர்.