கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா: விடிய விடிய அக்னி சட்டி ஊர்வலம்
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விடிய விடிய அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இன்று இரவு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள கவுமாரியம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றதும், சுயம்புவாக எழுந்தருளியிருப்பதும் வீரபாண்டி மற்றும் கம்பம் கவுமாரியம்மன் கோயில்களாகும். இரு கோயில்களிலும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் சித்திரை மாதம் 21 நாட்கள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்துவார்கள். தினமும் பல்வேறு விதமான அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வருவார். ஏப்., 21 ல் சாட்டுதல், ஏப். 22 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. மே 12 வரை திருவிழா நடக்கிறது. பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்த துவங்கினார்கள். விடிய விடிய ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தனர். நகரின் அனைத்து வீதிகளில் இருந்தும் மேளதாளங்கள்முழங்க வலம் வந்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அலகு குத்துதல், முளைப் பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. இன்று இரவு கோடாங்கி வாசகம் கோயில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர், ஹிந்து சமய அறநிலைய துறையினர் செய்துள்ளனர். நாளை வேளாளர் சங்கங்களின் சார்பில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.