உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலை மீது புதிய மாதேஸ்வரன் கோவில் கட்டும் திருப்பணிகள் தீவிரம்

மலை மீது புதிய மாதேஸ்வரன் கோவில் கட்டும் திருப்பணிகள் தீவிரம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உள்ள மாதேஸ்வரன் மலையில், அரசு நிதி, 62.50 லட்சம் ரூபாய் மற்றும் நன்கொடையாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் வழங்கிய தொகையில், புதிய மாதேஸ்வரர் கற்கோவில் கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.


மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், குட்டையூர் அருகே மாதேஸ்வரன் மலை உள்ளது. இந்த மலை மீது இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட, பலநூறு ஆண்டுகளுக்கு மேலான மாதேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீப விழாவும், தை மாதம் மாட்டுப் பொங்கல் விழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். மிகவும் பழமையான கோவில் என்பதால் சிதிலமடைந்து இருந்தது. இக்கோவிலை இடித்து விட்டு புதிதாக கட்ட, அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்ததை அடுத்து, புதிதாக கோவில் கட்ட தமிழக அரசு, 62.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதோடு, நன்கொடையாளர்கள், மக்கள் ஆகியோர் வழங்கிய தொகையில், கோவில் கட்டுமான திருப்பணிகள் துவங்கி உள்ளன. இப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் சுப்பையன், உறுப்பினர்கள் கிருஷ்ணகுமார், ரங்கசாமி, ஜெயமணி, மஞ்சுளா மற்றும் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.


இதுகுறித்து மாதேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுவினர் கூறியதாவது: தமிழக அரசின் அனுமதியின் பேரில், பழைய கோவிலை இடித்துவிட்டு, புதிய கற்கோவில் கட்டும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மூலவர் சன்னதி ஏழுக்கு ஏழு அடியிலும், அர்த்தமண்டபம் ஆறுக்கு ஆறு அடியிலும் கற்களால் கட்டப்பட்டு வருகின்றன. கற்பகிரக கோபுரத்தின் மீது, சிற்பங்கள் செதுக்கிய சுமார் பத்து டன் எடையுள்ள ஒரே கல்லை வைக்கப்பட உள்ளது. மேலும், 40 அடி நீளம், 30 அடி அகலத்தில் கற்களால், மகா மண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்கு தேவையான கற்கள், ராசிபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. காரைக்குடியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள், கல்லில் சிற்பங்களை செதுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிற்பக் கற்களை கொண்டு செல்வதற்கு, மலை மீது பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்கொடையாளர்கள் பலர் உதவி செய்து வருகின்றனர். நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை கோவில் அறங்காவலர்களும், அதிகாரிகளும் ஆய்வு செய்தும் வருகின்றனர். இதுவரை, 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன. இவ்வாறு அறங்காவலர் குழுவினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !