உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள ஈஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசை

அங்காள ஈஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசை

எண்ணுார்: பர்மா நகர் அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழாவில், 1,200க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


எண்ணுாரில், பர்மா தமிழர்கள் வசிக்கும், அன்னை சிவகாமி நகர் எனும் பர்மா நகரில், 60 ஆண்டுகள் பழமையான பீலிக்கான் முனீஸ்வரர் – அங்காள ஈஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, 60ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்றிரவு நடந்தது. 200க்கும் மேற்பட்ட பெண்கள், முளைப்பாரி சட்டியை தலையில் சுமந்தபடி அணிவகுக்க சுவாமி புறப்பாடாகின. கடலில் புனித நீராடிய பக்தர்கள், மேள தாளங்கள் முழங்க மருளாடினர். பின், அலகு, ராட்சத அலகு, மணி வேல், துாக்க நேர்ச்சை அணிந்தும், முதுகில் அலகு குத்தியபடி, ஆட்டோ, தேங்காய் உள்ளிட்டவற்றை ஊர்வலமாக இழுத்து வந்தனர். மேலும், பக்தர்கள் சிலர், பிரமாண்ட அக்னி சட்டிகளை கையில் ஏந்தியும், ஆண்கள் சிலர், பெண் வேடம், கருப்பசாமி, முனீஸ்வரர், சுடலை மாட சுவாமி உட்பட பல்வேறு தெய்வங்கள் வேடமணிந்தும் கோவிலை நோக்கி, படையெடுத்தனர். நிறைவாக, கோவில் வளாக மைதானத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், ஆக்ரோஷமாக மருளாடியடி, 1,200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாசி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு, வடசென்னையில் அதிக மக்கள் கூடும் திருவிழா என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேபோல, விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாரதியார் நகர் – கத்திவாக்கம் மேம்பாலம் வரையிலான, எண்ணுார் விரைவு சாலையில், போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !