கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி தெருவடைச்சான் உற்சவம்
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் வைகாசிப் பெருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை, மாலை வீதியுலா நடக்கிறது. ஐந்தாம் நாள் விழாவான நேற்று காலை அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடந்தது.இரவு 11:00 மணிக்கு சோமாஸ்கந்தர், பராசக்தி அம்மன், வள்ளி தேவசேனா சமேத முருகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாளை இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பரிவேட்டை நடக்கிறது. 30ம் தேதி சனிக்கிழமை, ஒன்பதாம்நாள் விழாவாக தேர்த்திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 31ம் தேதி நடராஜர் தரிசனம் வீதியுலா, ஊடல் ஐதீகம், ஸ்ரீநடராஜர் திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்குகளில் ராஜ வீதியுலா நடக்கிறது. ஜூன் 1ம் தேதி தெப்ப உற்சவம், 2ம் தேதி ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி, இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 3ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசண்டேசுவரர் வீதியுலா நடக்கிறது.