திருப்புத்துார் பச்சலுடைய அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
திருப்புத்துார்; திருப்புத்துார் ஒன்றியம் பைக்குடிப்பட்டி, முத்தணங்கோட்டை பச்சலுடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
இக்கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசியில் புரவி எடுப்பு விழா நடத்துவர். மே 8 ல் பிடிமண் கொடுக்கப்பட்டு மே 22ல் சேங்காய் வெட்டு நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் சூளையிலிருந்து புரவிகள் எடுத்து வரப்பட்டு கிராம மந்தையில் புரவிகள் அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று இரவு அரண்மனை புரவி, துணை புரவி இரண்டு, காளை, நேர்த்திக்கடனாக வைக்கப்பட்டிருந்த மதலைப்பிள்ளைகள் ஆகியவற்றை ஊர்வலமாக கிராமத்தினர் பச்சலுடைய அய்யனார் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர்.
பின்னர் கோயிலில் புரவிகள் இறக்கப்பட்டு அய்யனாருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கிராம, கிராம தெய்வம், விழாக்களின் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிவதற்கான பேச்சுப்போட்டிகள் நடந்தன. மேலும் மழலை மொழிப் பேச்சுப்போட்டியில் 13 குழந்தைகள் பங்கேற்று அசத்தினர்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பைக்குடிப்பட்டி, முத்தணங்கோட்டை கிராமத்தார்கள் செய்தனர்.