திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற முடிவு
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நீண்ட நாட்களாக பணிபுரியும் அதிகாரிகளை மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முதியோருக்கான தரிசனம் என, மூன்று வரிசைகளில் பக்தர்கள், கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால், அர்ச்சகர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு பணியாளர்கள் கூட்டாக சேர்ந்து, பக்தர்களிடம் பணம் பெற்று, தரிசனத்திற்கு குறுக்குவழியில் அனுப்புவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆட்சி மாற்றத்திற்கு பின், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மே 29ல் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சாதாரண உடையில் மாஸ்க் அணிந்தபடி திடீரென ஆய்வு செய்தார். அப்போது, தரிசனத்திற்கு பணம் வாங்கிய அர்ச்சகர் அய்யப்பன், அவருக்கு உடந்தையாக இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் கருப்பசாமி, தோப்பு ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து, கோவிலில் பூஜை செய்ய அர்ச்சகர் அய்யப்பனுக்கு தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியாளர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், அமைச்சர் விதிமுறையை மீறி செயல்பட்டதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சரான எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதற்கு சமூக வலைதளத்தில் பதில் அளித்திருந்த அமைச்சர் ரமேஷ், மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் ஜாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கோவிலில், இன்னும் பல முறைகேடுகள் நடந்து வருவதை விரைவில் வெளியே கொண்டு வருவேன் என, தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து, கோவில் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: அர்ச்சகர்கள், பக்தர்களிடம் பணம் பெற்று, குறுக்குவழியில் தரிசனத்திற்கு அழைத்து செல்லும் செயல், பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அர்ச்சகர்களுடன் கூட்டு சேர்ந்து அவர்களுக்கு கிடைக்கும் தொகையை, உயர் அதிகாரிகளும் பங்கு போடும் நிலை உள்ளது. 100 ரூபாய் கட்டணத்தில் நடந்த முறைகேடு போன்று, கோவிலுக்கு சொந்தமான கடைகளில் வாடகை வசூலிப்பது, சொத்துக்களுக்கு வாடகை நிர்ணயம் செய்வது, ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பது என உயர் அதிகாரிகள் சிலர், வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். உள்ளூர் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவோடு, இவ்வளவு நாட்களும் அவர்கள் செயல்பட்டு வந்தனர். இதுதொடர்பான முழு விபரத்தையும் ஆய்வின்போது, அமைச்சர் ரமேஷ் சேகரித்து உள்ளார். விதிமுறை மீறலுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு, துணையாக இருந்த அதிகாரிகள், கூண்டோடு இன்னும் ஓரிரு நாட்களில் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.