இடித்து அகற்றப்பட்ட அகத்தீஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடங்காததால் பக்தர்கள் அதிருப்தி
பொன்னேரி: திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வஞ்சிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், அதற்கான பணிகள் ஏதும் நடைபெறாததால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அகத்தியர் வழிபட்ட, 163 ஸ்தலங்களில், 76வதாக இது விளங்குகிறது.
மிகவும் பழமையான இத்திருத்தலம் பாழடைந்ததால், சுவர்களில் மரங்கள் வளர்ந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் கட்டுமானங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தன.
பக்தர்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, ஹிந்து சமய அறநிலையத்துறையின் மூலம் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள, 99 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த ஆண்டு, மார்ச் 31ல் பாலாலயம் செய்யப்பட்டு , கோவில் கற்சிலைகள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டன. தொடர்ந்து, அகத்தீஸ்வரர், விநாயகர், வள்ளி – தொய்வானை முருகபெருமான், ஆனந்தவல்லி தாயார், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் ஆகிவயற்றின் சன்னிதிகளும், மடப்பள்ளியும் இடித்து அகற்றப்பட்டன.
கோவிலின் தற்போதைய அமைப்பில் எந்தவொரு மாற்றமும் செய்யக்கூடாது; திருப்பணிகளை பாதியில் நிறுத்தக்கூடாது என, கோவில் நிர்வாகத்திற்கும், பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கும், ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், கோவில் கட்டமைப்புகள் முழுமையாக இடிக்கப்பட்டு ஓராண்டிற்கு மோலாகியும், இதுவரை அங்கு திருப்பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. கோவில் இருந்த இடத்தில், தற்போது இடிபாடுகள் மட்டுமே உள்ளன. கட்டமைப்புகளை இடித்துவிட்டு, திருப்பணிகளை தொடங்காமல் இருப்பது, கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், உடனடியாக கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.